பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கோடு இணைத்துப் பேச்சு; பொள்ளாச்சி ஜெயராமன் மான நஷ்ட வழக்கு: உதயநிதிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கோடு இணைத்துப் பேச்சு; பொள்ளாச்சி ஜெயராமன் மான நஷ்ட வழக்கு: உதயநிதிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தன் மகனுக்குத் தொடர்பிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியதை எதிர்த்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ரூ.1 கோடி கேட்டுத் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்கிற முழக்கத்தை முன்வைத்து திருக்குவளையில் கருணாநிதியின் வீட்டிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

மண்ணச்ச நல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார். பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்குப் போடுங்கள் என்று சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் உதயநிதி பேச்சு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்திப் பேச உதயநிதி ஸ்டாலினுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை, ஜனவரி 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் இணைய வழியில் தொடர்ந்த வழக்கில், பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in