Published : 22 Jan 2021 01:42 PM
Last Updated : 22 Jan 2021 01:42 PM

ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை: 5 கொள்ளையர்களுக்கு வலை

ஓசூரில் உள்ள பிரபல முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைத் துப்பாக்கி முனையில் 5 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்துப் பணம் பெறுவர். இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை வழக்கம்போல் நிறுவனத்தைத் திறந்த சீனிவாச ராவ் பணியைத் தொடர்ந்தார். இங்கு ஊழியர்கள் பிரசாத், மாருதி ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொள்ளை நடந்த முத்தூட் நிறுவனம்

இன்று காலை வழக்கம்போல் நிறுவனம் இயங்கிய நிலையில் 9.30 மணி அளவில் முகமூடி அணிந்தபடி 5 நபர்கள் திடுதிடுவென்று உள்ளே நுழைந்தனர். அவர்கள் ஐந்து பேரும் கையில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை வைத்திருந்தனர். அதை வைத்து அங்கிருந்தவர்களை மிரட்டித் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு நகை வைத்துப் பணம் வாங்க ராஜு என்கிற இளைஞரும் வேறு சிலரும் இருந்தனர். அனைவரையும் தாக்கிய அவர்கள் அவர்களைக் கட்டிப்போட்டனர்.

பின்னர் அங்கிருந்த லாக்கரில் இருந்த அடகு நகைகள் சுமார் 25 கிலோ தங்க நகைகள் அனைத்தையும் 3 பைகளில் அள்ளிப் போட்டனர். கல்லாவில் இருந்த ரொக்கப் பணம் 96,000 ரூபாயையும் எடுத்துக்கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ.9 கோடிக்கு மேல் வருகிறது.

பட்டப் பகலில் ஜனநடமாட்டம் மிகுந்த சாலையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் துணிச்சலாக நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள், பணத்தை எடுக்க வந்தவர்களைத் துப்பாக்கி முனையில் கை, கால்களைக் கட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் வெளியிலிருந்து வந்த இளைஞர் ராஜுவின் தந்தை சம்பவத்தைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த ஓசூர் நகர போலீஸார் முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் சம்பவம் நடந்தபோது இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்ட வேறு தடயங்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட
கொள்ளையர்கள் வந்த வாகனம், அவர்கள் தப்பிச் சென்ற வழிகளில் சிசிடிவி கேமரா எதுவும் உள்ளதா? என போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மாவட்ட எல்லைகளில் உள்ள செக் போஸ்ட்டுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. முத்தூட் நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றிக் கொள்ளை நடந்த விதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் வங்கியில் சுவரில் துளையிட்டு 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன. அதன் பின்னர் மிகப்பெரிய அளவிலான அதுவும் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் என்பதால் ஓசூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x