Published : 22 Jan 2021 11:20 AM
Last Updated : 22 Jan 2021 11:20 AM

பழநி தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - ஜன 28- ல் தேரோட்டம்

பழநி தைப்பூசத்திருவிழா இன்று (ஜன.,22) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்துநாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 28 ம் தேதி நடைபெறவுள்ளது.

பாத யாத்திரைக்கு புகழ்பெற்ற திண்டுக்கல் மாவட்டம் பழநி தைப் பூசத்திருவிழா நேற்று காலை பெரிய நாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி கொடிமண்டபத்தில் எழுந்தருளினார்.

கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு காலை 7.30 மணிக்கு மகரலக்னத்தில் சேவல், மயில் வேல் பொறிக்கப்பட்ட மஞ்சல் நிற கொடி ஏற்றப்பட்டது. தைப்பூச விழா தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பழநி நோக்கி பாதயாத்திரையாக செல்லதொடங்கியுள்ளனர். விழாவின் ஆறாம் நாள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் ஜனவரி 27 இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் ஜனவரி 28 ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாநாட்களில் தினமும் சுவாமி ரதவீதிகளில் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

தைப்பூச கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணைஆணையர் கிராந்திகுமார்பாடி, உதவிஆணையர் செந்தில்குமார், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் பாஸ்கரன், செல்வகுமார், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தைப்பூசத்தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பழநியில் திரள்வர் என்பதால் கரோனா கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x