Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

போக்குவரத்து ஊழியர்களுக்கு விரைவில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்: சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நல இணை ஆணையர் லட்சுமிகாந்தனுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர். படம்: க.பரத்

சென்னை

போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென தொழிலாளர் நல இணை ஆணையரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம்தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில், 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி தொமுச,சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, சென்னை குரோம்பேட்டையில் கடந்த 5-ம்தேதி, புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் மற்றும் தொமுச, அ.தொ.பே, சிஐடியு, ஏஐடியுசி உட்பட 67 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் நிர்வாகம் தரப்பில் ஏற்கப்பட்டுள்ளன. அதேநேரம் 14-வது ஊதியஒப்பந்தம் தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தில் தொழிலாளர் நலஇணை ஆணையர் லட்சுமிகாந்தனுடன், தொமுச, சிஐடியு, ஏஐடியுசிஉள்ளிட்ட 9 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, “போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த 2019-2020-ம்ஆண்டில் தவறாக கணக்கிடப்பட்டு போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. போனஸ் சட்டத்தின்படி, ஊழியர்களுக்கு தலா ரூ.16,800 வழங்க வேண்டும். ஆனால், ரூ.8,400 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, போனஸை சட்டப்படி கணக்கீடு செய்து, எஞ்சியுள்ள போனஸ் தொகையை வழங்க வேண்டுமென இந்த பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியுள்ளோம்.

இதேபோல், போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x