Last Updated : 21 Jan, 2021 07:33 PM

 

Published : 21 Jan 2021 07:33 PM
Last Updated : 21 Jan 2021 07:33 PM

ஊரடங்கால் சாலை விபத்துகள் குறைந்தாலும் கோவையில் குறையாத 108 ஆம்புலன்ஸ் பயன்பாடு: 46 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம்

அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்-ல் அழைத்துவரப்பட்ட நோயாளி | படம்: ஜெ.மனோகரன்.

கோவை

கரோனா கால ஊரடங்கால் கடந்த ஆண்டு கோவையில் சாலை விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், 108 ஆம்புலன்ஸ் பயன்பாடு குறையவில்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காகவும், பிரசவ காலங்களில் கர்ப்பிணிகளை அழைத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் மொத்தம் 38 ஆக இருந்த 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை ஓராண்டில் 59 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் கோவை, நீலகிரி மாவட்ட மேலாளர் செல்வ முத்துக்குமார் கூறியதாவது:

''கடந்த 2020-ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கிய 7,689 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், 2019-ம் ஆண்டு கோவையில் 10,013 சாலை விபத்துகளில் ஆம்புலன்ஸ் உதவி கோரப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் ஜூன் வரை போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்துபோனதே இந்த வித்தியாசத்துக்கு காரணம்.

கர்ப்பிணிகளுக்கு உதவி

கரோனா அச்சம் காரணமாகப் பல கர்ப்பிணிகள் பிரசவ காலத்தில் முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. பொதுப்போக்குவரத்துச் சேவையும் முடக்கப்பட்டதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்தது.

2020-ம் ஆண்டு கோவையில் 46 பிரசவங்கள் ஆம்புலன்ஸிலேயே நிகழ்ந்துள்ளன. 104 பிரசவங்கள் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களின் உதவியுடன் வீட்டில் நிகழ்ந்துள்ளன.

மொத்தம் 8,982 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் உதவி தேவைப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 9,885 கரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறைவான நேரம்

கோவை மாநகரப் பகுதிக்குள் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்று சேரும் நேரமும் கடந்த 4 மாதங்களில் 15 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் புதிதாக 21 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். மேலும், போக்குவரத்து போலீஸார் உதவியுடன், அதிக விபத்து நிகழும் இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களுக்கு அருகில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்துள்ளோம்.

அதன்படி, மருதமலை சாலையில் நிகழும் விபத்துகளில் சிக்கியவர்கள் மீட்க வடவள்ளியிலும், அவிநாசி சாலையில் நிகழும் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்கப் பீளமேடு காவல் நிலையத்திலும், திருச்சி சாலையில் ராமநாதபுரம், மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம், காரமடையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு செல்வ முத்துக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x