Published : 21 Jan 2021 06:15 PM
Last Updated : 21 Jan 2021 06:15 PM

சாதி வாரியான புள்ளிவிவரம்; ஆறு மாதத்தில் ஆணையம் அறிக்கை அளிக்கும் உத்தரவை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களைத் திரட்ட ஆணையத்திற்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியதை எதிர்த்தும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 6 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆறு மாத அவகாசம் வழங்கியதை எதிர்த்தும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை விதிக்கக் கோரியும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “கடந்த 1983-ம் ஆண்டு சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த அம்பாகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், மூன்று ஆண்டுகளை எடுத்துள்ள நிலையில், தற்போதைய ஆணையம் ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க கூறப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது”. என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆணையம் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்காத நிலையில், இந்த வழக்கு முன் கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஒரு நபர் ஆணையம் அறிக்கை அளித்து, அதை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x