Published : 21 Jan 2021 06:04 PM
Last Updated : 21 Jan 2021 06:04 PM

50% மாணவர்கள் 3 மணி நேரம், 2 ஷிப்ட்; பள்ளிகள் திறக்கக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்து வைப்பு

சென்னை

50% மாணவர்கள் கொண்ட 2 ஷிப்டுகளாக 3 மணி நேரம் இயங்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசு எவ்வித நிர்பந்தமும் இன்றி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.

செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் என்பவர் 50% மாணவர்கள் கொண்ட 2 ஷிப்டுகளாக 3 மணி நேரம் இயங்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளர்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் 16-ம் தேதி பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் 24 மணி நேரமும் வீட்டில் முடங்கியுள்ளனர். சமீபத்திய ஆய்வுகளில், 22.3 சதவீத இளம் மாணவ - மாணவியருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது, கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ - மாணவியர் தூக்கமின்மை, ஆரோக்கிய குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதேபோல குழந்தைகளின் நடத்தை, உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக 87 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர், இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற நிச்சயமற்ற நிலையில், கல்விச் சுமையும் மாணவர்களின் மனநலத்தை பாதிக்கச் செய்வதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தற்போது, நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, குழந்தைகள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதித்துள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 50 சதவீத மாணவர்களுடன் இரு அமர்வுகளாக தலா மூன்று மணி நேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும்”. எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகள் துவங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு தான் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளிகள் திறப்பது முக்கியமானது என்றாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அதேசமயம் பள்ளிகள் திறப்பு தொடர்பாக, எந்த அழுத்தமும் இல்லாமல், அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கு முன் கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்காவிட்டால் மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்கு தொடரலாம் எனக் கூறி, வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x