Published : 21 Jan 2021 04:50 PM
Last Updated : 21 Jan 2021 04:50 PM

இலங்கைக் கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் மீட்பு

இலங்கைக் கடற்படை தாக்குதலால் உயிரிழந்த தமிழக மீனவர்கள் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சார்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கசிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சார்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய நான்கு பேர் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து திங்கட்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தமிழக மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்துப் படகில் துரத்தியபோது மீனவர்களின் படகில் கடுமையாக மோதியதில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமாகினர்.

மூழ்கும் படகை தேடும் பணிக்காக இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான படகுகளும் மற்றும் கப்பலொன்றும் புதன்கிழமை ஈடுபடுத்தப்பட்டது.

நெடுந்தீவு அருகே மூழ்கிய படகில் உயிரிழந்த நிலையில் இரண்டு (செந்தில்குமார், சாம்சன் டார்வின்) மீனவர்களின் உடல்களை கடற்படையின் ஸ்கூபா வீரர்கள் புதன்கிழமை மாலை மீட்டனர்.

இரண்டாவது நாளாக மீனவர்களின் உடல்களை இலங்கைக் கடற்படை தேடும் பணியில் ஈடுபட்ட போது வியாழக்கிழமை மெசியா மற்றும் நாகராஜ் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நான்கு உடல்களும் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக மீனவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தாயகம் அனுப்புவதற்கான பணிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x