Published : 21 Jan 2021 02:39 PM
Last Updated : 21 Jan 2021 02:39 PM

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூல்; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மூடல்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்

அரசே மருத்துவக்கல்லூரியை எடுத்துக்கொண்டப்பின் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி லட்சக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதை மாணவர்கள் எதிர்த்துப் போராடியதை அடுத்து மருத்துவக்கல்லூரி மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற நிர்பந்தப்படுத்தப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

“கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், போராட்டத்தை ஒடுக்கும் வகையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி , ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியை காலவரையற்ற முறையில் மூட உத்தரவிடப் பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

விடுதியை விட்டு மாலை 4.00 மணிக்குள் வெளியேற வேண்டும் என மாணவர்களை மிரட்டுவது, அராஜகத்தின் உச்சக் கட்டம். தமிழக அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனம், அட்டூழியம் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது.

ஒரு புறம் ஏழை மாணவர்களுக்கு உதவுவதாக கூறும் தமிழக அரசு, மறுபுறம் ஏழை மாணவர்களிடம் ஈவிரக்கமற்ற முறையில், கடும் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளை விட பல மடங்கு அதிகமாக கல்விக் கட்டணம் மேற்கண்ட கல்லூரிகளில் வசூலிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ 13,600 மட்டுமே. ஆனால், தமிழக அரசே ஏற்று நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ 5.44 லட்சமாகும். இது நியாயமற்றது. அநியாயமானது.

எனவே
# தமிழக அரசின் இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

# ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும்.

இக் கோரிக்கைகளை ஏற்று, இக் கல்லூரிகளை மாணவர்கள் நலன் கருதி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் படிப்பு பாதிக்கும் வகையில் கல்லூரிகளை மூடக் கூடாது என தமிழக அரசை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x