

விருதுநகர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியிடத்தில், 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
5 மாடி கட்டிடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. கட்டுமானப் பணியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி இன்று காலை நடைபெற்று வருகிறது.
அப்பொழுது தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் கலவையை எடுத்தபோது அங்கிருந்து தவறி கீழே விழுந்து கூரைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.