Published : 21 Jan 2021 02:15 PM
Last Updated : 21 Jan 2021 02:15 PM

தெருக்கூத்து நாடகம் மூலமாக ஓசூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

ஓசூர்

ஓசூர் நகரில் 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஓசூர் மாநகராட்சியில் ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் ஓசூர் ரயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

ஓசூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நாடகக் கலை நிகழ்ச்சியை ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலையில் வேலூர் துணைப் போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். இதில் கிருஷ்ணகிரி நாடக குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று எமதர்மன் மற்றும் சித்தரகுப்தன் வேடமணிந்து நடித்தனர்.

இதில் எமதர்மன், ''யார் தலைக்கவசம் அணியவில்லை, யார் சீட்பெல்ட் அணியவில்லை, யார் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை, எனக்கு வேலை கொடு!'' என்று சித்திரகுப்தனிடம் கோபமாகக் கேட்பது போலவும், அதற்கு சித்திரகுப்தன், ''அதற்கு அவசியமில்லை, உங்களுக்கு வேலை குறைந்து விட்டது. அனைவரும் உறுதி மொழி எடுத்துவிட்டனர். அதாவது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டமாட்டோம், குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டோம், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டமாட்டோம் உள்ளிட்ட சாலை விதிகளை மதிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துவிட்டனர். இனிமேல் நமக்கு வேலை இல்லை'' என்று கூறுகிறார்.

ஓசூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேசிய சாலைப் பாதுகாப்பு மாத தெருக்கூத்து நாடகத்தை வேலூர் மண்டலப் போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தொடங்கி வைத்தார். உடன் ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பலர்.

அதற்கு எமதர்மன், ''யாராவது சாலை விதிகளை மீறினால் நான் உடனே வருவேன், பின்னாலேயே வருவேன, அவர்கள் 120 கி.மீ. வேகத்தில் வாகனத்தில் சென்றால், நான் 108 வாகனத்தில் பின்தொடருவேன். எனக்கு வேலை வைக்காமல், சாலை விதிகளைக் கடைப்பிடித்து, குடும்பத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழுங்கள்'' என்று எமதர்மன் கூறுவது போல இந்த நாடகம் நிறைவு பெறுகிறது.

மேலும் அனைவரும் சாலை விதிகளை மதிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் என வலியுறுத்தி, தெருக்கூத்து நாடகத்தில் நடித்த கலைஞர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நாடகத்தி இறுதியில் அங்கு கூடியிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலை விதிமுறைகளைப் படித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சாலை விதிமுறைகள் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரணிதரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x