Last Updated : 21 Jan, 2021 12:14 PM

 

Published : 21 Jan 2021 12:14 PM
Last Updated : 21 Jan 2021 12:14 PM

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சாலை மறியல்

கடலில் ரோந்து படகு மூலம் இடித்து மீனவர்களை மூழ்கடித்துக் கொன்ற இலங்கை கடற்படையினரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் இன்று (ஜன.21) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), என்.சாம்(28), எஸ்.செந்தில்குமார்(32) ஆகிய 4 மீனவர்கள் ஜன.18-ம் தேதி கடலுக்கு மீன்படிக்க சென்றனர்.

இவர்கள் மறுநாளான நேற்று முன்தினம் காலையில் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு திரும்பவில்லை.இது குறித்து மீன்வளத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது, இலங்கை கடல்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இவர்களது விசைப்படகில் இடித்து அதே இடத்திலேயே மீனவர்களுடன் படகை மூழ்கடித்தது தெரியவந்தது.

இது, சக மீனவர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை கடற்படை தீவிரமாக தேடி வந்தது. அதில், நேற்று இரவு 2 சடலங்களும், இன்று 1 சடலம் என மொத்தம் 3 சடலங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சடலங்களை வெளிப்படைத் தன்மையோடு பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக மீன்பிடிப்பதை இரு நாட்டு அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் மீன்வளத் துறை அலுவலர்கள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். சாலை மறியல் போராட்டத்தினால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x