Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் பாமக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் அருள் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி 5 கட்டமாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 6-வது கட்டமாக வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடக்கவுள்ளது.
வட மாவட்டங்களில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் பின்தங்கியுள்ளது. அரசு வேலை வாய்ப்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வில் 4 சதவீதமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இனியும் அரசு காலம் தாழ்த்தாமல் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்ட இரு புயல் காரணமாக சிறு, குறு தொழில்கள், விவசாயம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் புயல் நிவாரண நிதியாக ரூ1,200 கோடி கேட்டுள்ளது. அந்த நிதியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் பாமக மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தற்போது, அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT