Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

மெரினாவில் கடை நடத்த குலுக்கல் முறையில் 900 பயனாளிகள் தேர்வு

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் கடை நடத்த, 900 பயனாளிகள் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

மெரினா கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்தும் விதமாக, அதன் பரப்பு மற்றும் கொள்திறன் அடிப்படையில் 900 கடைகளை மட்டும் அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அங்கு மாநகராட்சியால் வழங்கப்படும் ஸ்மார்ட் வண்டி கடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் ஏற்கெனவே கடைகளை வைத்திருந்த, மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட கடைக்காரர்களுக்கு 60 சதவீதம் (540) கடைகள், மெரினாவில் கடை நடத்தாத, பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 40 சதவீதம் (360) கடைகள் ஒதுக்கப்பட உள்ளன.

அதற்காக 14 ஆயிரத்து 322 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதிலிருந்து 900 பயனாளிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஷெனாய் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிக்கிம் மாநில முன்னாள் தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி பங்கேற்று பயனாளிகளை தேர்வு செய்தார். இன்று குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீடு நடைபெறுகிறது.

இந்நிழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், துணை ஆணையர் ஜெ.மேகநாதரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

மெரினாவில் ஏற்கெனவே வியாபாரம் செய்த அனைவருக்கும் கடை ஒதுக்கக் கோரியும், குலுக்கல் முறையில் வெளியாட்களுக்கு கடை ஒதுக்குவதை கண்டித்தும், மெரினா கடற்கரை வியாபாரிகள் சங்கத்தினர், காமராஜர் சாலையில் உள்ள அயோத்தி குப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x