Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோரை பூந்தமல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்விக்கு, சோழிங்கநல்லூர் அருகே தாழம்பூர் கிராமத்தில் 2.94 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கான பவர் ஏஜென்ட்டாக அவரது மருமகன் ஜோதிமணி இருந்துள்ளார்.
அந்த நிலத்தை செல்வியும், ஜோதிமணியும் கடந்த 2007-ம்ஆண்டு சென்னை - வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு ரூ.5.14 கோடிக்கு விற்க ஒப்புக்கொண்டு, ரு.3.50 கோடி முன்பணமாகப் பெற்றுவிட்டு, உறுதியளித்தப்படி நிலத்தை நெடுமாறனுக்கு விற்காமல் வேறு ஒருவருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளதாகவும், கடந்த 2009-ம் ஆண்டு, முன்பணத்தை திருப்பிக் கேட்ட நெடுமாறனை தாக்கி, மிரட்டியதாகவும் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2012-ம்ஆண்டு செல்வி மற்றும் அவரதுமருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் தீர்ப்பைநேற்று முன் தினம் வழங்க இருப்பதாக ஏற்கெனவே மாஜிஸ்திரேட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
அப்போது, வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் இருவரையும் விடுதலை செய்வதாக மாஜிஸ்திரேட் குருலட்சுமி தெரிவித்தார். இதையடுத்து இருவரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT