Published : 20 Jan 2021 06:50 PM
Last Updated : 20 Jan 2021 06:50 PM

மாயமான கோயில் சிலைகள் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்.

சென்னை

பல கோயில்களின் சொத்துகள், சிலைகள் மாயமானது தெரியவந்துள்ளதாகக் கூறி, சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது குறித்து சிபிசிஐடி, தொல்லியல் துறை அடங்கிய கூட்டுப் புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. மாயமான சிலைகள் குறித்துக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வரலாறு, சிலைகளின் தொன்மை, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தின் பல கோயில்களில் இந்தப் பதிவேடுகள் காணாமல் போனதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இதில் பல கோயில்களின் சொத்துகள், சிலைகள் மாயமானது தெரியவந்துள்ளதாகக் கூறி, சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது குறித்து சிபிசிஐடி, தொல்லியல் துறை அடங்கிய கூட்டுப் புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “கடத்தப்படும் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன. இது சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் உடந்தையுடன் சிலைகள் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எந்தெந்தக் கோயில்களில் உள்ள சிலைகள் மாயமாகியுள்ளன என்பதைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள், நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x