Last Updated : 20 Jan, 2021 06:15 PM

 

Published : 20 Jan 2021 06:15 PM
Last Updated : 20 Jan 2021 06:15 PM

தமிழகத்தில் 8 மாதங்களில் 6.40 லட்சம் முகாம்களில் 3.50 கோடி பேருக்கு காய்ச்சல் பரிசோதனை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 3.50 கோடி பேருக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 2000 மினி கிளினிக்கள் திறக்கப்படுகின்றன. இந்த கிளினிக்குகளில் பணிபுரிய 585 மருத்துவ உதவியாளர்கள், 1415 செவிலியர்கள் தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் போது வேலைவாய்ப்பு பதிவு, இடஒதுக்கீடு ஆகிய பின்பற்றப்படாது. கரோனா காலத்தில் அனுபவமில்லாத மருத்துவபணியாளர்கள் , செவிலியர்களை தேர்வு செய்வது ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே, மினி கிளினிக்குகளில் பணிபுரிய தனியார் ஏஜென்சி மூலமாக மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் டிச. 15-ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா மற்றும் பருவ கால நோய்கள் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதில் ஒன்று தான் ஒரு ஆண்டுக்கு மாநிலம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறப்பது. இந்த மினிகிளினிக்களில் பணிபுரிய 2000 மருத்துவர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையிலும், தலா 2000 செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் அவுட்சோர்சிங் மூலமாகவும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மினி கிளினிக்களுக்கு கடந்த 3 மாதங்களில் 665 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1335 மருத்துவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் மாவட்ட கழகம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்துவது அவசியமாகும். இதற்காக மாவட்ட, தாலுகா அளவிலான மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியது இருப்பதை கருத்தில் கொண்டு குடியிருப்புகளுக்கு அருகே மினி கிளினிக்கள் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 6.40 லட்சம் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் 3.50 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். தற்போது கரோனா தடுப்பு ஊசி போடப்படுகிறது. இந்த நேரத்தில் மினி கிளினிக் செயல்படுவதை தடுத்தால் தடுப்பு ஊசி போடும் பணியில் தொய்வு ஏற்படும். எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மினி கிளினிக் பணியாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் பணி நியமனம் நடைபெற்று வருகிறது. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசுத் தரப்பில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x