Published : 20 Jan 2021 04:49 PM
Last Updated : 20 Jan 2021 04:49 PM

இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்- தேடுதல் பணி தீவிரம்

இலங்கைக் கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது. படகிலிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மாயமாகினர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சார்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கசிமடத்தைச் சார்ந்த மெசியா (30), உச்சிப்புளியைச் சார்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சார்ந்த சாம் (28) ஆகிய நான்கு பேர் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து திங்கட்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தமிழக மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்துக் கப்பலில் துரத்தியபோது மீனவர்களின் படகில் கடுமையாக மோதியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமாகினர்.

இது குறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்தியப் படகை சிறைபிடிக்கச் சென்றபோது அந்தப் படகு தங்களது ரோந்துக் கப்பலை படகை சேதப்படுத்தி தப்பிச் சென்ற போது கடலில் கவிழ்ந்துவிட்டது எனவும் படகை மீட்கும் பணியும் மீனவர்களைக் கடலில் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் மூன்று விசைப்படகுகளில் 12 தமிழக மீனவர்கள் கொண்ட குழு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x