Published : 20 Jan 2021 04:36 PM
Last Updated : 20 Jan 2021 04:36 PM

பொதுமக்கள் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கண்டிப்பு

பொதுமக்கள் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார்.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், அம்ரூட் திட்டப் பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று ஆய்வு செய்தார்.

மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினால் சேதமடைந்த சாலைகளை வார்டு வாரியாக உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி, பாதாள சாக்கடை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

சாலையோரங்களில் சேரும் குப்பைகளை காலதாமதமின்றி அகற்ற வேண்டும். பொறியாளர்களும், சுகாதார ஆய்வாளர்களும் தங்களது வார்டு பகுதிகளில் தினந்தோறும் நேரில் சென்று குறைகளையும், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பழுது சரிசெய்வதற்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிசெய்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளிலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் குறித்து வரும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவுப்படுத்தி பிப்ரவரி மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்ரூட் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாரிலிருந்து குடிநீர் கொண்டு வரும் பணியினை விரைவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணையாளர் ச.விசாகன், நகரப்பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x