Published : 20 Jan 2021 03:43 PM
Last Updated : 20 Jan 2021 03:43 PM

ஒரே தலைப்பில் இரண்டு திரைப்படங்கள்: இயக்குனர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 

சென்னை

தான் எடுக்கும் படத்தின் பெயரிலேயே திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு, பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அது குறித்து பட நிறுவனத்தின் உரிமையாளர், இயக்குனர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில் விசித்திரன் என்ற அதே தலைப்பை பயன்படுத்தி "பி ஸ்டுடியோ" என்ற நிறுவனத்தின் மூலம் இயக்குனர் பாலா என்பவரும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேசும் தயாரித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மலையாள படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தை பத்மகுமார் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தனது விசித்திரன் தலைப்பில் படத்தை தயாரிக்க தடைவிதிக்க கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு குறித்து பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குனர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x