Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்: இன்முகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்

மதுரையில் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

மதுரை ஈவேரா மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு காய்ச்சல் கண்டறியும் சோதனை செய்த ஆசிரியை. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் அரசு, தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

கரோனா ஊரடங்கு தற்போது வெகுவாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் நலன்கருதி ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நேற்று முதல் வகுப்புகள் செயல்படத் தொடங்கின.

மதுரை மாவட்டத்தில் சுமார் 534-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் வகுப்பறைகள், பள்ளி வளாகங்களைச் சுத்தம் செய்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் காய்ச்சல் பரிசோதனை, முகக் கவசம், சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாணவரும் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வாங்கி வந்தனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு நேற்று வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

வகுப்பறைகளில் முதலில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு நெறிமுறை, கரோனா விழிப்புணர்வு ஆகிய கருத்துகளை அறிவுறுத்தினர். பிறகு வழக்கம்போல் பாடம் நடத்தினர்.

மதுரை மண்டலப் பொறுப்பாள ரான தமிழகப் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வித் திட்ட இயக்குநர் ராமேசுவர முருகன், முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் ஒத்தக்கடை அரசு பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் அரசு, தனியார், மெட்ரிக். உட்பட 72 உயர்நிலைப் பள்ளிகளும், 146 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பில் 15,930 மாணவர்கள், பிளஸ் 2-வில் 14,905 மாணவர்கள் படிக்கின்றனர். 70 சதவீத மாணவர்களே நேற்று பள்ளிக்கு வந்தனர்.

விருதுநகர்

விருதுநகரில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி நகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான வகுப்புகள் தொடங்கின. அங்கு விருதுநகர் ஆட்சியர் இரா.கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளில் அரசு விதித்துள்ள கரோனா தடுப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதாகவும், 95 சதவிகித மாணவ,மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அரசுப் பள்ளியிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உடனிருந்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் 85 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்.

சிவகங்கை

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 270 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். மாணவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்தும், ரோஜா பூக்கள், இனிப்பு, பேனா கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x