Last Updated : 19 Jan, 2021 09:19 PM

 

Published : 19 Jan 2021 09:19 PM
Last Updated : 19 Jan 2021 09:19 PM

பாரம்பரியம் மணக்கும் நாட்டரசன்கோட்டை செவ்வாய் பொங்கல்: ஒரே சமயத்தில் 917 பேர் பொங்கல் வைப்பு

சிவகங்கை

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் இன்று நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஒரே சமயத்தில் 917 பேர் பொங்கல் வைத்தனர்.

நாட்டரசன்கோட்டை பகுதியில் அதிக அளவில் நகரத்தார் வசிக்கின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து முதல் செவ்வாய்க் கிழமை செவ்வாய் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர்.

இதற்காக திருமணம் முடிந்த நகரத்தாரின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாகக் கணக்கிடுவர். அவர்களின் பெயரைச் சீட்டில் எழுதி வெள்ளிப் பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். முதல் சீட்டில் வருவோர் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன்பாக முதல் பானையாக பொங்கல் வைப்பர்.

அதன்படி இன்று மாலை நடந்த பொங்கல் விழாவில் முதல் சீட்டில் தேர்வான சொக்கலிங்கம் குடும்பத்தினர் மண் பானையில் பொங்கல் வைத்தனர். அதைத் தொடர்ந்து 917 நகரத்தார் குடும்பத்தினர் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைத்தனர். மேலும் மற்ற சமூகத்தினரும் அவர்களுக்கு அருகிலேயே தனி வரிசையில் பொங்கல் வைத்தனர். அனைவரும் வெண் பொங்கல்தான் வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும், இந்த விழாவில் உறவினர்கள் குசலம் விசாரித்து வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பங்கேற்கும் இவ்விழாவில், கரோனா காரணமாக இந்த ஆண்டு அவர்கள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து நாட்டரசன்கோட்டை நகரத்தார் கூறுகையில், "200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு 400 புள்ளிகள்தான் இருந்தன. தற்போது 900க்கு மேல் வந்துவிட்டது. இதனால் பொங்கல் வைக்கவே இடம் போதாத அளவிற்கு கூட்டம் வந்துவிட்டது.

எங்களில் பலர், வெளியூர், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் எந்த விழாவிற்கு வராவிட்டாலும், செவ்வாய் பொங்கலுக்கு வந்துவிடுவர். இந்த விழா உறவினர்களை ஒன்று சேர்க்கும் விழாவாகவும் இருக்கும்" என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x