Last Updated : 19 Jan, 2021 02:22 PM

 

Published : 19 Jan 2021 02:22 PM
Last Updated : 19 Jan 2021 02:22 PM

ஸ்டெர்லைட் வழக்கு: ரஜினி ஆஜராகவில்லை; வீடியோ கான்பரன்ஸிங்கில் விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மனு

வழக்கறிஞர் இளம்பாரதி (இடது), ரஜினிகாந்த் (வலது)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையில் இன்று ரஜினிகாந்த் ஆஜராகவில்லை.

அவருக்குப் பதிலாக ஆஜரான அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ரஜினிகாந்திடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்த ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துள்ளார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 23 கட்ட விசாரணைகள் நடந்துள்ள நிலையில் மொத்தம் 865 பேருக்கு சம்மன் அனுப்பி 586 பேர் விசாரிக்கபட்டுள்ளனர். 775 ஆவணங்கள் சேகரிக்கபட்டுள்ளது.

2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-வது கட்ட விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையில் ஜனவரி 19-ம் தேதி ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி வந்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று அங்கு பேட்டி அளித்திருந்தார்.

அது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஆஜராகவில்லை. அவர் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு ஒரு நபர் ஆணையம 2-வது சம்மன் அனுப்பியது. அதில் ஜனவரி 19-ம் தேதி அதாவது இன்று தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி நேரில் விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்திடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம். தூத்துக்குடி விசாரணை ஆணையத்தின் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த வசதியில்லாததால் சென்னையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று ஆனையம் தெரிவித்துள்ளது. இரண்டு மாத கால அவகாசத்திற்க்கு பிறகு விசாரணை நடக்கலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x