Published : 19 Jan 2021 06:49 AM
Last Updated : 19 Jan 2021 06:49 AM

ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.19,592 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.19 ஆயிரத்து 591 கோடியே 63 லட்சத்தை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் தலைமையிலான மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு, மாநில நிதியமைச்சர்களுடன் காணொலி வாயிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றானது பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தியதுடன், மாநில அரசுகளின் நிதி நிலையையும் சீர்குலைத்துள்ளது. ‘ஆத்ம நிர்பர் பாரத்’ திட்டம் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியுள்ளது. இக்கட்டான சூழலில் பல்வேறு உதவிகளை அளித்து வரும் பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்த உற்பத்தி மதிப்பில் 2 சதவீதம் கூடுதலாக கடன் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. நீண்டநாளாக நிலுவையில் இருந்த2017-18-ம் ஆண்டு ஒருங்கிணைந்தஜிஎஸ்டி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையின் ஒரு பகுதியை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2021-22-ம் ஆண்டில் நிதி சீர்திருத்தத்துக்கு இதுவரை சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிதிநிலை படிப்படியாக சரியும் என்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் வரை கடன் வாங்க மாநில அரசுகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். இதுதவிர, கரோனா தடுப்புநடவடிக்கைக்கான செலவினங்களை மேற்கொள்ளவும் அனுமதியளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் 5 ஆண்டு இழப்பீடு காலம்2021-22 நிதியாண்டுடன் முடிவடைகிறது. ஜிஎஸ்டியால் நீண்ட காலத்துக்கு நிலையான வருவாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் மாநிலங்கள் ஜிஎஸ்டியில் இணைந்தன. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்யானது. தெளிவான வருவாய் வளர்ச்சிக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இதுபோன்ற சிக்கலான காலத்தில் மாநில அரசுகளின் வருவாய்பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இழப்பீட்டை தொடர்வது உள்ளிட்ட மாற்று வழிமுறைகள், கூடுதல்வரிவிதிப்பு அதிகாரம் அளித்தல் ஆகியவை ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டும்.

செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரியில் இணைப்பதன் மூலம், மாநிலங்களும் கூடுதல்வருவாய் பங்கை பெற முடியும். வரும் 2021-22-ம் ஆண்டில் 15-வதுநிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள மானியங்களை விரைவாக எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி வழங்க வேண்டும். முந்தைய 14-ம் நிதி ஆணையம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த ரூ.2 ஆயிரத்து 577 கோடியே 98 லட்சம் மானிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.14 ஆயிரத்து400 கோடியில் கோதாவரி - காவிரிஇணைப்பு திட்டத்தை தொடங்க உள்ளது. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி கோரப்பட்டுள்ளது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு விரைவில் அனுமதியளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி நீர்த்தேக்க கால்வாய், வைகை ஆறு, கோதையாறு திட்டங்களுக்கு ரூ.730 கோடியே 5 லட்சம் நிதி தேவைப்படுகிறது. இத்திட்டத்துக்கு அனுமதியளிப்பதுடன், மத்திய நிதிநிலை அறிக்கையில் தேவையான நிதியும் ஒதுக்கவேண்டும். ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, வேளாண் விற்பனை கட்டமைப்பு நிதி, பால்பதப்படுத்தல், கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவற்றுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்.

ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் திட்டமிடப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு அனுமதியளிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ்நிலுவையில் உள்ள ரூ.19 ஆயிரத்து591 கோடியே 63 லட்சத்தை விரைவாக வழங்க வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீட்டுக்கான நிதியை ரூ.4 லட்சமாக உயர்த்தவேண்டும். முதியோர் உதவித்தொகையை மாதம் ரூ.1,000 எனஉயர்த்தி, அதற்கு போதிய நிதியைபட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x