Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

திருமழிசை அருகே நேமம் ஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சுவாமி தரிசனம்

நேமம் ஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே நேமம் கிராமத்தில் ஆவுண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் நேற்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, கோயிலுக்கு வந்த தமிழிசையை பாஜக மாநில ஓபிசி அணி தலைவர் லோகநாதன், திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும்போது, "கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. ஆகவே, தடுப்பூசியை போட்டுக்கொள்ள தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். கோயில் குளங்களை தூர்வாரி பராமரிக்க இந்து சமய அறநிலையத் துறையிடம் பரிந்துரைக்கப்படும்’’ என்றார்.

தெலங்கானா ஆளுநர் வருகையை ஒட்டி அப்பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில், டிஎஸ்பி சாரதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x