Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய மூதாட்டி பல்கீஸ் தாதிக்கு காயிதே மில்லத் விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

சென்னை

காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் நேர்மைக்கான 2020-ம் ஆண்டின்காயிதே மில்லத் விருது, சமூகஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் தலைமையிலான ‘கார்வானே மொஹப்பத்’ (அன்புக்கான வாகனம்) என்ற அமைப்புக்கும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற பல்கீஸ் தாதி என்ற மூதாட்டிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கரோனா காரணமாக விருது வழங்க முடியவில்லை.

விருது பெறும் இருவரும் டெல்லியில் இருப்பதால் டிச.16-ல்தேதி டெல்லியில் இந்தியன் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில் கார்வானேமொஹப்பத் அமைப்புக்கும், பல்கீஸ் தாதிக்கும் காயிதேமில்லத் விருது வழங்கப்பட்டது.

விருதுக்கான தேர்வு கமிட்டி தலைவரும், சென்னை எஸ்ஐஇடி குழுமத் தலைவருமான மூசா ரசா, ‘இந்து’ என்.ராம், கல்வியாளர் வசந்திதேவி ஆகியோர் இணையம் வழியாக வாழ்த்துரை வழங்கினர். ‘மஜ்லிசே முஷாவரத்’ அமைப்பின் தலைவர் நவேத் ஹாமித் அவர்களுக்கு விருது பட்டயமும், ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

காயிதே மில்லத்தின் கொள்ளுப் பேத்தியும், அறக்கட்டளை உறுப்பினருமான நஜ்லா ஹமீதா இணையம் மூலம் சிறப்புரை நிகழ்த்தினார். இத்தகவலை காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளைபொதுச்செயலாளர் தாவூத் மியாகான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x