Published : 18 Jan 2021 08:29 PM
Last Updated : 18 Jan 2021 08:29 PM

மெரினா கடற்கரையில் 900 ஸ்மார்ட் கடைகள்: ஜன.20, 21 தேதிகளில் உரிமையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் அமைக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து ஜன.20, 21 அன்று அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகர் அம்மா அரங்கில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கத்தோடு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, மெரினா கடற்கரையில் வியாபாரம் மேற்கொள்ள 900 ஸ்மார்ட் கடைகள் குலுக்கல் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட உள்ளது.

மெரினா கடற்கரையில் ஏற்கெனவே, வியாபாரம் நடத்தி பெருநகர சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்கள் வகை “அ” என்ற அடிப்படையில், 900 கடைகளில் 60 சதவீதம் கடைகள் என 540 கடைகளும், ஏனைய கடை நடத்த விருப்பமுள்ளவர்கள் வகை “ஆ” என்ற அடிப்படையில் 40 சதவீதம் கடைகள் என 360 கடைகளும் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

“அ” வகையில் 1,351 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு 1,348 விண்ணப்பங்களும், “ஆ” வகையில் 14,827 விண்ணப்பங்கள் பெறப்பட்டுப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு 12,974 விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை தலைமையகம், 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகத்திலும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்திலும் (www.chennaicorporation.gov.in) ஜன.06 முதல் பொதுமக்கள் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நீதிபதி முன்னிலையில் ஷெனாய் நகர், A பிளாக், 12-வது தெரு, கிரசென்ட் விளையாட்டுத் திடல் அருகில், பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா அரங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஜன.20 அன்று காலை 11 மணி முதல் குலுக்கல் முறையில் “அ” வகையில் 540 நபர்களும், பிற்பகல் 3 மணிக்கு “ஆ” வகையில் 360 நபர்களும் என மொத்தம் 900 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தொடர்ந்து ஜன.21 அன்று காலை 11 மணி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 900 நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கப்படும். எனினும் மேற்படி 900 கடைகள் ஒதுக்கீடானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிறப்பு விடுப்பு மனு (SLP) மற்றும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வழங்கப்படவுள்ள தீர்ப்புக்கு உட்பட்டது என்ற நிபந்தனையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x