Last Updated : 18 Jan, 2021 08:20 PM

 

Published : 18 Jan 2021 08:20 PM
Last Updated : 18 Jan 2021 08:20 PM

பொது இடங்களில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட சிலைகளை அகற்றுக: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் அரசு பொது இடங்கள் மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட பலருக்கு அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மரியாதை செய்கின்றனர். பல இடங்களில் தலைவர்கள் சிலையால் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

சட்டம்- ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுவதால் சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேரக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சிலைகளின் அருகே அமைக்கப்பட்டிருக்கும் ஏணிகளை அகற்றவும், அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவைத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இன்று விசாரித்தது.

பின்னர், ''அரசு பொது இடங்கள் மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்ற வேண்டும். அரசியல் மற்றும் மதம் சார்ந்த சிலைகள், கட்டுமானங்களாக இருந்தாலும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதியற்ற சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது தொடர்பான நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x