Published : 18 Jan 2021 07:59 PM
Last Updated : 18 Jan 2021 07:59 PM

தனது எஸ்டேட்டைக் காப்பாற்ற தென்பெண்ணை ஆற்றிலிருந்து ஏரிகளுக்கு நீர் செல்லாமல் தடுப்பவர் கே.பி.முனுசாமி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை

திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் எங்கெங்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் வரவில்லையோ, அங்கெல்லாம் உடனடியாக அந்த இணைப்பைக் கொடுத்து அதை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய முதல் வேலை என தருமபுரி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

தருமபுரி மாவட்டம் - பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட சூடனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''எனக்கு மிகச் சிறப்பான வகையில் ஒத்துழைப்பு தந்து, இங்கே 10 பேர் இந்த ஊர் பகுதி மக்கள் சார்பில் பல்வேறு கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள், கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள், பிரச்சினைகளையும் நீங்கள் பேசி இருக்கிறீர்கள்.

செல்வி இங்கு இருக்கும் தண்ணீர்ப் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். அதைத் தொடர்ந்து தரணி ஒகேனக்கல் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். நஞ்சுண்டன் கூட்டுறவு ஆலைகளில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி சுட்டிக்காட்டி, வேதனையாக சில உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகேஸ்வரி ஒரு மாற்றுத்திறனாளி. அவரும் பேசினார். இங்கு திமுக இருந்தபோது பல்வேறு வசதிகள் இருந்தன. தலைவர் கருணாநிதிதான் மாற்றத்திறனாளிகள் என்ற சொல்லைக் கொண்டுவந்தார். ஏன் என்றால் ‘உடல் ஊனமுற்றவர்கள்‘ என்றுதான் அழைப்பார்கள். அது அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு ‘மாற்றுத்திறனாளிகள்‘என்ற பெயரைச் சூட்டி, அந்தத் துறையைத் தன் கைகளில் வைத்துக் கொண்டார் கருணாநிதி. அந்த அளவிற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆனால், இப்போது அந்த நிலை இல்லை என்பதை வேதனையோடு இங்கு அந்தச் சகோதரி குறிப்பிட்டுச் சொன்னார். அதேபோல இடைநிலை ஆசிரியர் பிரச்சினைகளைப் பற்றி கலைவாணி குறிப்பிட்டுச் சொன்னார். முனிரத்தினம் இந்தப் பகுதி பின்தங்கிய நிலையில் இருக்கிறது. எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்று பேசினார்.

இங்கு இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் அதிமுகவைச் சார்ந்தவர். அமைச்சராகவும் இருக்கிறார். அவருடைய வளர்ச்சிதான் அதிகமாக இருக்கிறதே தவிர, இந்த மாவட்டத்திற்கும் இந்தப் பகுதிக்கும் எந்த வளர்ச்சியும் இல்லை என்பதைப் பற்றியும் வேதனையோடு இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.

அதேபோல அமிர்தராஜ் வேலைவாய்ப்புப் பிரச்சினை பற்றியும், சுய உதவிக் குழுக்களைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லி, சுழல் நிதியை உயர்த்திக் கொடுக்க வேண்டும், மானியத் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்பதையும் சொன்னார்.

உங்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘சுய உதவிக் குழு‘ என்பதை முதன்முதலில் கலைஞர்தான் தொடங்கி வைத்தார். இந்த தருமபுரி மாவட்டத்தில்தான் முதன்முதலில் தொடங்கி வைத்தார் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அப்படித் தொடங்கி வைத்தபின், அந்த சுய உதவிக் குழுக்கள் பொறுப்பை, அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த என்னிடம்தான் ஒப்படைத்தார். அப்பொழுது எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

சத்யா இங்கு இருக்கும் ஏரிப் பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்லி இருக்கிறார். ஆகவே, இதுதான் ஒட்டுமொத்தமாக இங்கு இருக்கும் பிரச்சினை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.

சுய உதவிக் குழுவைத் தொடங்கி வைத்தபோது தலைவர் கருணாநிதி, சுய உதவிக் குழு என்பது பெண்களுக்காக, மகளிருக்காக உருவாக்கப்படுகிறது என்று சொன்னார். பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும், சுயமாக வாழ்க்கை நடத்த வேண்டும், எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னம்பிக்கை உள்ளவர்களாக, சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அந்த சுய உதவிக் குழு என்ற திட்டத்தை உருவாக்கினார்.

சுழல் நிதி, வங்கிக் கடன், மானியத்தொகை இதையெல்லாம் கொடுத்தார்கள். அதை வாங்கிக் கொண்டு பெண்கள் சிறு சிறு தொழில் செய்து, ஒரு குழு சேர்த்து, அந்தக் குழுவின் மூலமாக அந்தத் தொழிலைச் செய்து உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதுடன், தன்னம்பிக்கை பெற்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தை தலைவர் கருணாநிதி உருவாக்கினார்.

ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை. முன்பெல்லாம் நீங்கள் வங்கிகளுக்குச் சென்றீர்கள் என்றால் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்தார்கள். ஆனால், இப்பொழுது நீங்கள் வங்கிப் பக்கமே செல்ல முடியவில்லை. உங்களை விரட்டி அடிக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். அந்த நிலைமைதான் இன்றைக்கு சுய உதவி குழுக்களைப் பொறுத்தவரைக்கும் இருக்கிறது.

ஒகேனக்கல் திட்டம் கொண்டு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அது முழுமையாக இந்த மாவட்டத்திற்கு வந்து சேரவில்லை. தருமபுரி, கிருஷ்ணகிரி இந்த 2 மாவட்டத்தின் நீண்ட நாள் பிரச்சினை அது. அந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு கலந்து விடுகிறது - அந்தத் தண்ணீரைக் குடித்தால் எலும்புருக்கி நோய் வருகிறது - பல் எல்லாம் கரைபடிந்து கருப்பு நிறமாக மாறுகிறது என்ற நிலை இருந்து வந்தது.

அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் அறிவித்தார். அறிவித்தபொழுது நான் துணை முதல்வராக இருந்தேன்.

அப்பொழுது என்னை ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கு இருக்கும் வங்கியில் கலந்து பேசி, இதற்கு வேண்டிய நிதி உதவியைக் கடனாகப் பெற்றுக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தார். நானும் சில அதிகாரிகளும் அங்கு சென்றோம்.

ஜப்பான் நாட்டிற்குச் சென்று கலைஞருடைய கருத்துகளை எடுத்துச் சொன்னோம். உடனடியாக அவர்கள் ஒப்புதல் கொடுத்தார்கள். ஒப்புதல் கொடுத்து அந்தத் திட்டத்தை இந்தப் பகுதியில் தலைவர் தொடங்கி வைத்தார் என்பது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி, நேரடியாக வந்து தருமபுரியில் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தொடங்கிவைத்து அத்துடன் நிறுத்தி விடவில்லை. நான் ஒரு மாதத்திற்கு 4 முறை தருமபுரிக்கு வருவேன். கிருஷ்ணகிரிக்கும் வருவேன். என்ன வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? குழாய் பதிக்கப்பட்டுவிட்டதா? எங்கெங்கு இணைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் நேரடியாக நான் வந்து விசாரித்தேன்.

அதுமட்டுமில்லாமல் ஒரு உயரதிகாரியை இங்கு போட்டு, ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தி கவனிக்க வைத்து கிட்டத்தட்ட ஒரு 80% வேலை முடிக்கப்பட்டது. இன்னும் 4 மாதங்கள் நாம் ஆட்சியில் இருந்திருந்தால் 100% பணியை முடித்திருப்போம்.

ஆனால், தேர்தல் வந்துவிட்டது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாம் எதிர்க் கட்சியாக மாற்றப்பட்டோம். ஆளும் கட்சியாக அதிமுக வந்தது. அவர்கள் வந்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும். செய்த பணியை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தி இருந்தால் இந்தப் பிரச்சினை இருந்திருக்காது.

அந்த 20% வேலையைக் கூட முடிக்க முடியாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஏனென்றால் இந்தத் திட்டம் நிறைவேறினால் திமுகவிற்குப் பெயர் வந்துவிடும். கருணாநிதியைப் பாராட்டுவார்கள். ஸ்டாலினுக்கு இந்தச் சிறப்பு சென்றுவிடும் என்ற அரசியல் நோக்கத்தோடு அந்தத் திட்டத்தை அவர்கள் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

சட்டப்பேரவையில் பலமுறை நாங்கள் கேட்டோம். முறையான பதில் இல்லை. அதற்குப் பிறகு 2 மாவட்டங்களும் சேர்ந்து பெரிய போராட்டம் நடத்தினோம். நிதியை ஜப்பானில் சென்று வாங்கி வந்து, தலைவரை வைத்து தருமபுரியில் அடிக்கல் விழா நடத்தியது நாம். ஆனால் இந்தத் திட்டத்திற்காக நாமே போராட்டம் நடத்தியதுதான் அதில் வெட்கக்கேடு.

அதற்குப் பிறகு ஏதோ பெயருக்கு வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். அந்தப் பணி முழுமை அடையவில்லை. இப்பொழுது சொல்கிறேன், திமுக ஆட்சிக்கு வந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைப் பொறுத்தவரைக்கும் எங்கெங்கு அந்த ஒகேனக்கல் குடிநீர் திட்டம் வரவில்லையோ அங்கெல்லாம் உடனடியாக அந்த இணைப்பைக் கொடுத்து அதை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய முதல் வேலை என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதுபோலத்தான் இந்த ஆட்சியில் 10 வருடமாக மக்களுக்கு எந்த காரியமும் செய்யவில்லை. உதாரணமாக, இந்த அமைச்சரைப் பற்றிச் சொன்னீர்கள். சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடியவரின் கவனத்திற்குப் பலமுறை சென்றிருக்கும்.

உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த நீட் பிரச்சினை உங்களுக்கு தெரியும். இது எதற்கு என்றால் என்னதான் பள்ளிக்கூடத்தில் உயர்ந்த மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தாலும், நேரடியாக யாரும் மருத்துவர் ஆக முடியாது.

அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதை எதிர்த்து இன்றைக்கு வரைக்கும் நாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தலைவர் முதல்வராக இருந்த நேரத்தில் கொண்டு வந்தார்கள். ஆனால், தலைவர் கருணாநிதி அதை அனுமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சென்று தடை வாங்கி வைத்திருந்தார். தலைவர் இருந்தவரைக்கும் நீட் தேர்வு உள்ளே வரவில்லை.

இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் தலைவர் அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூட நீட் தேர்வு வரவில்லை. ஆனால், இப்பொழுது எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்த பிறகு உள்ளே வந்து இருக்கிறது என்றால் என்ன காரணம்? மத்திய அரசுக்கு எடுபிடியாக எடப்பாடி இருக்கிற காரணத்தினால் அதை அனுமதித்துவிட்டார்.

சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானம் போட்டு, ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். இதுவரைக்கும் எந்த மரியாதையும் இல்லை. அதனால் இன்றைக்கு வரை அனிதாவில் தொடங்கி 14 மாணவ - மாணவியர்கள் மருத்துவராக முடியாது என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். இப்படி எல்லாம் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி, அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் திட்டமிட்ட பொழுது, அதை நான்தான் முதலில் எதிர்த்து அறிக்கை கொடுத்தேன். ஆனால், இதைக் கவனிக்க வேண்டியது யார்? கல்வித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய, இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்க வேண்டியவர்தான் இதைக் கவனிக்க வேண்டும்.

ஆனால், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அதைப் பற்றிச் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. இப்பொழுது நீங்கள் பேசுகிறபோது சொன்னீர்கள். பஞ்சப்பள்ளி அணையிலிருந்து பாலக்கோடு மாரண்டள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படக்கூடிய வகையில் திட்டம் தீட்டி, குடிநீர் தேவையை வழங்கியது திமுக அரசு என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சரான கே.பி.அன்பழகன், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் தருமபுரிக்கு வருவதை நிறுத்தி விட்டார் என்ற புகார் மக்களிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதேபோல தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை வைத்து தருமபுரி மாவட்டத்தில் 15 ஊராட்சிகள் பயனடையக் கூடிய திட்டம் கொண்டு வருவோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்றைக்கு உறுதி தந்தார். நான் கேட்கிறேன், இதுவரைக்கும் அது நடந்திருக்கிறதா? அது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? இல்லை.

அதே போல, அலையாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டி ஏரி வரை, வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வரும் திட்டத்தை நான் வெற்றி பெற்றவுடன் கொண்டு வருவேன் என்று அன்பழகன் சொன்னார். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்போது இருக்கக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தினார். என்றைக்கு என்றால் நான் தேதியோடு சொல்கிறேன், நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். நான் கலைஞருடைய மகன். எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு முதல்வர் வந்தார். அப்பொழுது முதல்வர் அதை முடித்துக் கொடுப்பேன் என்று சொன்னார்.

நான் சொல்வது பொய்யல்ல, உண்மை. வீடியோ ஆதாரம் இருக்கிறது. 4 வருடங்களாக அந்தத் திட்டம் அப்படியே உள்ளது. ஒரு கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியின் லட்சணம். இதற்காகத்தான் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று நாம் இன்றைக்குக் கூடி இருக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல் வத்தல் மலையை சுற்றுலாத் தலமாக ஆக்க 2 வருடத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள். இதுவரைக்கும் ஏதாவது நடந்திருக்கிறதா? இதுவரைக்கும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்களா? இல்லை.

அதே போல தருமபுரி மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படவேண்டும் என்று அறிவித்தார்களே தவிர இதுவரைக்கும் ஏதாவது அமைத்திருக்கிறார்களா? இல்லை. பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல் புதூர் என்ற கிராமத்திற்கு அருகில் தென்பெண்ணையாற்றின் உபரி நீரை வாய்க்கால் மூலம் தும்பல அள்ளி அணைக்கு கொண்டு வரப்போவதாக கே.பி.அன்பழகன் வாக்குறுதி கொடுத்தார்.

5 வருடம் ஆகியது. இதுவரைக்கும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவராவது அமைச்சர் உறுதிமொழி தந்தார். காப்பாற்றவில்லை என்று சொல்கிறோம். அமைச்சர் இல்லாமலேயே ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது கே.பி. முனுசாமி. இப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவர் அமைச்சர் இல்லை. ஆனால் அவர் அமைச்சர் போல ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதாவது பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய தூள்செட்டி ஏரி உட்பட பல ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரைக் கால்வாய் அமைத்து ஏரிகளுக்குத் தண்ணீர் விடுவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் நாம் சொல்லி இருந்தோம். இந்தப் பாசனக் கால்வாயைத் தருமபுரி மாவட்டத்திற்கு இணைப்பு செய்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட மக்களும் பயன்பெறுவார்கள்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தைப் போல பெரிய அளவில் நிச்சயமாக மக்களுக்குப் பயன்பட்டு இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தில் சில சச்சரவுகளை, சில தடங்கல்களை கே.பி.முனுசாமி செய்து கொண்டிருக்கிறார் என்று இந்தப் பகுதி மக்கள் தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் கே.பி.முனுசாமியின் எஸ்டேட் பாதிக்கப்படும் என்று அதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஊரே இன்றைக்குப் பேசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x