Last Updated : 18 Jan, 2021 07:38 PM

 

Published : 18 Jan 2021 07:38 PM
Last Updated : 18 Jan 2021 07:38 PM

தமிழக வேளாண் ஒப்பந்தச் சட்டத்துக்குத் தடை கோரிய வழக்கு: வேளாண் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை அமல்படுத்தத் தடை கோரிய வழக்கில் வேளாண்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். விவசாயத்தில் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்த முடியாது.

விவசாயத்தின்போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்த முடியாது. விவசாய ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. இதற்கென அமைக்கப்பட்ட வருவாய்க் கோட்டக் குழுவின் மூலமே தீர்வு காண முடியும். இதை எதிர்த்து மாவட்ட அளவிலான குழுவில்தான் அப்பீல் செய்ய முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். அந்தச் சட்டத்தைச் செல்லாது என அறிவித்து, ரத்து செய்து உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக வேளாண் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 15-க்குத் தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x