Last Updated : 18 Jan, 2021 06:27 PM

 

Published : 18 Jan 2021 06:27 PM
Last Updated : 18 Jan 2021 06:27 PM

பொதிகை டிவியில் சமஸ்கிருதச் செய்தி: பிடிக்காவிட்டால் சேனலை மாற்றிக்கொள்ளுங்கள்- தடை கோரியவருக்குத் தலைமை நீதிபதி அறிவுரை

மதுரை

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி வாசிக்கத் தடை கோரி வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞருக்கு, சமஸ்கிருதச் செய்தி பிடிக்காவிட்டால் அந்த நேரத்தில் வேறு சேனலை மாற்றிக்கொள்ளுங்கள் எனத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிக்கப்படுகிறது. தமிழகத்தில் 803 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகினறனர். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மட்டும் மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சமஸ்கிருதத்தை விட மிகப் பழமையான தமிழ் மொழிக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

இந்தப் பாரபட்சமான நடவடிக்கைக்கு மத்தியில் பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிக்கத் தடை விதித்து, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ''சமஸ்கிருதச் செய்தி அறிக்கை தேவையில்லை என்றால் மனுதாரர் அந்த நேரத்தில் தொலைக்காட்சியை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம். இதைவிடப் பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கலாம்'' என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x