Published : 18 Jan 2021 12:21 PM
Last Updated : 18 Jan 2021 12:21 PM

கோவையில் களைகட்டிய ரேக்ளா போட்டி: முதலிடம் வென்ற காளைகளின் உரிமையாளருக்கு கார் பரிசு

எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி கோவை கொடிசியா மைதான சாலையில் நேற்று நடைபெற்ற ரேக்ளா போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, அதிமுக மற்றும் கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் கொடிசியா மைதான சாலையில் ரேக்ளா போட்டிகள் நேற்று நடைபெற்றன.

எம்ஜிஆர் இளைஞரணி கோவை மாநகர் மாவட்டச் செயலர் கே.ஆர்.ஜெயராமன் தலைமை வகித்தார். அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் அம்மன் கே.அர்ஜுனன் கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்த ரேக்ளா போட்டியில் பங்கேற்க 450 ஜோடி காளைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

200 மீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாக ரேக்ளா போட்டிகள் நடைபெற்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்றன. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளை
வழங்கினார்.

200 மீட்டர் ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு புல்லட் வாகனமும், 300 மீட்டர் ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாருதி காரும் பரிசாக வழங்கப்பட்டன. இதுதவிர 100 பேருக்கு சிறப்பு பரிசாக தங்கக் காசுகள் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் வெள்ளிக் காசு பரிசாக வழங்கப்பட்டது. 2 பல், 4 பல் இருக்கும் காளைகள் மட்டும் 200 மீட்டர் போட்டிகளில் அனுமதிக்கப்பட்டன. 300 மீட்டர் போட்டிகளில் 4 பற்களுக்கு மேல் உள்ள காளைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. விழாவில், கோவை வடக்கு எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x