

கொடைக்கானலில் மோயர் பாய்ண்ட் பகுதியில் இயற்கை எழிலை ரசித்த சுற்றுலா பயணிகள். பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் கொடைக் கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இரவில் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையால் கடும் குளிர் நிலவியது. கரோனா ஊரடங்கால் கொடைக்கானலில் கடந்த ஆண்டு கோடை விழா, மலர் கண்காட்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டன. மேலும் கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் முற்றிலும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஆண்டு தோறும் கோடை காலத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது தொடர் விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் வருகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதைவிட அதிக எண்ணிக்கையில் தற்போது பொங்கல் விடுமுறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து இயற்கை எழிலை ரசித்தனர்.
இதனால் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக பகலில் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இதமான குளிர் காற்றில் இயற்கையை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். இரவில் குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்ததால் கடும் குளிர் நிலவியது.