Published : 17 Jan 2021 03:35 PM
Last Updated : 17 Jan 2021 03:35 PM

கிருஷ்ணகிரியில் தினந்தோறும் 300 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினந்தோறும் 300 முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஓசூர் அரசு மருத்துவமனையில் தனியறைகள் ஒதுக்கப்பட்டு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பு அறை, தடு்ப்பூசி போடும் அறை, தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் சுமார் 30 நிமிடம் காத்திருக்கும் அறை, பக்க விளைவு இருப்பின் அவசர சிகிச்சை அளிப்பதற்கான அறை உள்ளிட்ட 4 அறைகளுடன் கரோனா தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கரோனா தடுப்பூசி மையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலையில் மாவட்டத்திலேயே முதல் நபராக அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் பூபதிக்கு கரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது. அவரை தொடர்ந்து தூய்மைப்பணியளர்கள், செவிலியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, ஓசூர் அரசு மருத்துவமனை, காவேரிப்பட்டிணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 மையங்களில் தலா 100 முன்கள பணியாளர்கள் வீதம் நாளொன்றுக்கு 300 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மருத்துவமனையைச் சார்ந்த 1,277 பணியாளர்களுக்கும், தனியார் மருத்துவமனையை சார்ந்த 2,491 பணியாளர்கள் என மொத்தம் 3,768 நபர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75 அரசு மருத்துவமனைகள் மற்றும் சுமார் 551 தனியார் மருத்துவமனைகளில் “கோ-வின்” இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள 12,192 முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாகக் கரோனா தடுப்பூசி போடும் வகையில் 11,500 “கோவிஷீல்டு” மருந்துகள் பெறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பயனாளியும் முகாமுக்கு வரும்பொழுது அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வர வேண்டும். பாதுகாவலர் பயனாளியின் அடையாள அட்டையைச் சரிபார்த்தவுடன் காத்திருப்போர் அறையில் அமர்த்தப்படுவார். சரிபார்ப்பாளர் பயனாளிகளின் விவரங்களை “கோ-வின்” இணையதளத்தில் சரிபார்த்தவுடன் தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போட்ட உடன் “கோ-வின்” இணையதளத்தில் தடுப்பூசி பெற்ற நிலை பதிவு செய்யப்படும். மேலும் 30 நிமிடங்கள் கண்காணிப்பாளர் அறையில் கட்டாயமாகக் காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்போர் அறை மற்றும் கண்காணிப்பாளர் அறையில் கரோனா நோய்த் தொற்று குறித்த தகவல்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள், சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வுப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x