Published : 17 Jan 2021 02:01 PM
Last Updated : 17 Jan 2021 02:01 PM
எம்ஜிஆரின் பிறந்த நாளன்று ஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியை உருவாக்க உறுதி ஏற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஏழை - எளியவர்களுக்கு வாரிக் கொடுத்த வள்ளல், தீய சக்திகளால் வெல்லவே முடியாத வெற்றி நாயகர், அறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனி, அடித்தட்டு மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு ஆட்சி புரிந்த பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் இன்று!
இந்நாளில் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் புரட்சித் தலைவரை வணங்கி, அவர்களது வழியில் ஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கிட உறுதி ஏற்றிடுவோம்!'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT