Published : 17 Jan 2021 02:05 PM
Last Updated : 17 Jan 2021 02:05 PM
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் குரங்கணி, அடுக்கம் உள்ளிட்ட மலைப்பாதைகளில் மண், பாறை சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்வதால் பல பகுதிகளிலும் ஈரமான நிலையே உள்ளது. மேலும் வெயிலும் இல்லாததால் குளிர்நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் தேனி மாவட்ட மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக போடியில் இருந்து குரங்கணி செல்லும் மலைப்பாதையின் இடதுஓரம் முழுவதும் அடர்த்தியான மண்சரிவுகளையும், கற்பாறைகளையும் கொண்டுள்ளது. தொடர் மழையால் பிடிப்புத்தன்மை குறைந்து சிறிய அளவிலான பாறைகள் உருண்டு விழுகின்றன.
இதே போல் பெரியகுளம் கும்பக்கரையில் இருந்து அடுக்கம் செல்லும் மலைப்பாதையிலும் பல இடங்களில் இதுபோன்ற லேசான மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. சாமக்காட்டுப்பள்ளம், குருடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிறிய அளவில் மண்சரிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மேகமலை மலைச்சாலையிலும் இதுபோன்ற நிலை தொடர்கிறது. கடந்த வாரம் போடிமெட்டு 4-வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் உருண்டு போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், மழைநேரங்களில் மலைப் பாதையில் பயணிப்பது ஆபத்தானது. தொடர்ந்து ஈரமாகவே இருப்பதால் பிடிப்புத்தன்மை குறைந்து ஆங்காங்கே மண், பாறைகள் சரிகின்றன. உடனுக்குடன் இவை அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்மழை நிற்கும் வரை மலைப்பாதைகளில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT