Published : 17 Jan 2021 12:20 PM
Last Updated : 17 Jan 2021 12:20 PM

எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளான இன்று (17.1.2021 - ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனையடுத்து, திமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அதிமுக கொடியினை ஏற்றி வைத்து, அங்கே குழுமியிருந்த நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x