Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

ஆன்லைன் கடன் செயலி விவகாரத்தில் சீனா தப்பிச் சென்றவரை பிடிக்க ‘இன்டர்போல்’ உதவியை நாடிய சென்னை போலீஸார்

ஆன்லைன் கடன் செயலி விவகாரத்தில் சிங்கப்பூர் வழியாக சீனாதப்பிச் சென்ற முக்கிய நபரை பிடிக்க ‘இன்டர்போல்’ போலீஸின் உதவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நாடியுள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் செயலி நிறுவனங்களை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சீனாவைச் சேர்ந்த ஜியா யமாவ், யுவான் லூன் என இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி சென்னை அழைத்து வரப்பட்டனர். பெங்களூரில் உள்ள ட்ரூ கிண்டல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் பல்வேறு பெயர்களில் கடன் செயலிகள் இவர்கள் நடத்தி வந்ததும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சீனர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்ததில், சீனாவைச் சேர்ந்த பலர் சிங்கப்பூரில் நிறுவனங்களை நடத்தி வருவதும் அங்கிருந்தபடி பினாமிகள் மூலம் இந்தியாவில் நிறுவனங்களை நடத்துவதும் தெரியவந்தது. ஆன்லைன் கடன்செயலி விவகாரத்திலும் அதேபோன்று நடந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சீனாவைச் சேர்ந்த ‘ஹாங்’ சிங்கப்பூரில் இருந்து கொண்டே இந்தியாவில் நிறுவனங்களை நடத்தி வந்ததும் தெரியவந்தது. ஹாங் மீதும்சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘லுக் அவுட்’ நோட்டீஸ்

இந்நிலையில் பெங்களூருவில் 2 சீனர்கள் கைது செய்யப்பட்டதும் சிங்கப்பூரில் இருந்த ஹாங் சீனாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ உதவியையும் போலீஸார் நாடியுள்ளனர். இதற்காக மத்திய உள்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சீன நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பது குறித்து மத்திய உளவுத்துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இவர்களின் உதவியுடன் ஹாங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x