

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நீடித்த மழைக்கு இதுவரை 63 வீடுகள் இடிந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, நம்பியாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டின.
இதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதை அடுத்து நீர்வரத்தும் குறைந்துவருகிறது.
இதனால் அணைகளில் இருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரன் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து 8077 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 6172 கனஅடி தண்ணீர் தாமிபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 15, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 14.2, நம்பியாறு- 1, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 12.40, சேரன்மகாதேவி- 5, நாங்குநேரி- 1, ராதாபுரம்- 7, பாளையங்கோட்டை- 10, திருநெல்வேலி- 3.50.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7819 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 8077 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடி 6044 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து வினாடிக்கு 6172 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதை அடுத்து அணைக்கு வரும் 943 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதுபோல் 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையும் முழுகொள்ளளவை எட்டியிருக்கிறது.
இந்த அணைக்கு வரும் 276கனஅடி தண்ணீரும் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 38.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளைநிலங்களை மூழ்கடித்த தண்ணீர் வடிய தொடங்கியிருக்கிறது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு இதுவரை 42 வீடுகள் முழுமையாகவும், 21 வீடுகள் பாதியளவுமாக மொத்தம் 63 வீடுகள் இடிந்துள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 205 பேர் 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.