Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தில் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு கிரண்பேடி ஒப்புதல்: மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒப்புதல் தருவாரா?

புதுச்சேரி

புதுவையில் 3.50 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முழு சுகாதார காப்பீடு திட்டத்தை அரசு அறிவித்தது.

அதன்படி புதுவையில் குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் காப்பீடு திட்டத்தின் வழியாக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். இதை பொங்கல் பரிசாக அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்திற்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிட அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் ஆளுநர் கிரண்பேடி அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் ஒரு பகுதியான சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிவப்பு குடும்ப அட்டைதாரர் கள் தனியார், அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்றால் காப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வரை அரசே மருத்துவமனைக்கு செலுத் தும். இந்தத் திட்டத்தின் கீழ் சிவப்பு அட்டைதாரர்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைவர்.

கடந்த காலத்தில் மாநில அரசு காப்பீடு திட்டத்தில் பயனாளிகள் ரூ.2.50 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம். முதலில் பயனாளிகள் மருத்துவமனையில் கட்டண தொகையை செலுத்த வேண்டும். அதன்பின் பயனாளிகள் விண்ணப்பித்து இந்த தொகையை பெறலாம்.

இதில் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது. இந்த திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு பயனாளிகள் நேரடியாயாக ரூ.5 லட்சம் வரை பயன்பெறும் வகையில் திருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக அரசு தரப்பில் கேட்டபோது, “சிவப்பு அட்டைதாரர்கள், மஞ்சள் அட்டைதாரர்கள் என தனித்தனியாக மருத்துவ காப்பீடு திட்ட கோப்பு அனுப்பப்பட்டது.

இதில் சிவப்பு அட்டைகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். மஞ்சள் அட்டைக்கான கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது” என்று கூறினர்.

மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஆளுநர் மருத்துவ காப்பீடுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்திலேயே இந்த திட்டம் அரசு அறிவித்தபடி அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டமாக உருவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x