Last Updated : 15 Jan, 2021 10:12 AM

 

Published : 15 Jan 2021 10:12 AM
Last Updated : 15 Jan 2021 10:12 AM

தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி போடும் பணி; ஜன.25-ம் தேதி வரை நடைபெறும்: ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீர் ஆய்வு செய்து கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

''தமிழகத்தில் நாளை முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாகப் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடும் இடங்களில் உள்ளே நுழைவதற்கு ஒரு வழியும், தடுப்பூசி போட்ட பிறகு மாற்று வழியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, ராதாபுரம், சிறுவந்தாடு வட்டார அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசிகள் அனைத்தும் சிறப்பு வாகனத்தில் குளிரூட்டப்பட்ட நிலையிலேயே சேமிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று இறங்கு முகத்திலிருந்தாலும் நாம் அதைத் தொடர்ந்து கண்காணித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வருகிறோம்.

நாளை முதல் தடுப்பூசி பணியைத் தொடங்க உள்ளதாக மத்திய அரசு கூறியதின் பேரில் மாநில அரசு, தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 3 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி பணிக்கான வழிகாட்டுதலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாளை (16-ம் தேதி) தேசிய அளவில் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்த பிறகு தமிழகத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் இம்மாதம் 25-ம் தேதிவரை தடுப்பூசி பணி நடைபெற உள்ளது''.

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அப்போது ஆட்சியர் அண்ணாதுரை, சுகாதாரத்துறை இணை இயக்குனர் சண்முக கனி, துணை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x