அரவக்குறிச்சி; இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இளைஞர், தம்பதி உயிரிழப்பு

அரவக்குறிச்சி; இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இளைஞர், தம்பதி உயிரிழப்பு
Updated on
1 min read

அரவக்குறிச்சி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர், தம்பதி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த இளைஞர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் குன்னூர் அன்னை இந்தியா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (20). இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டிங் வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிக்கைக்காக இருவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

மோட்டார்சைக்கிளை வினோத் ஓட்டி வந்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தெத்துப்பட்டி பிரிவு அருகே நேற்றிரவு சென்றப்போது எதிரே அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான செல்லதுரை (50) அவர் மனைவி லதாவுடன் 3 சக்கரம் பொருத்திய மொபட்டில் வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராமல் இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் படுகாயமடைந்த விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மூவரையும் அரவக்குறிச்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவக் கல்லூரி கொண்டு செல்லும் வழியில் செல்லமுத்து உயிரிழந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேல்சிகிச்சைக்காக வினோத் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற இளைஞரும், மாற்றுத்திறனாளியும், அவர் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in