Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

புதுவையில் 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

புதுச்சேரி

புதுச்சேரிக்கு கோவிட் ஷீல்டு கரோனா தடுப்பூசி நேற்று மாலை வந்தது. வரும் 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

கரோனா பெரும் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கரோனா தொற்றால் இந்தியாவில் 1.05 கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரியில் இதுவரை 38ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 639 பேர் உயிரிழந்துள்ளனர்.37,607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது உருமாறிய கரோனா தொற்று பரவி வருகிறது.

இதற்கிடையே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, இறுதி கட்ட பரிசோதனைகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 2, 8 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரு கட்டங்களாக கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

முதற்கட்டமாக மருத்துவர், செவிலியர் உட்பட மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 17,500 டோஸ் கோவிட் ஷீல்டு மருந்து புதுச்சேரிக்கு வந்தது. இந்த தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கிறது.

7 மையங்களில் தடுப்பூசி முகாம்

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருந்துவமனை, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை ஆகிய 7 மையங்களில் காலை 9 மணிக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டுமே தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை 7 மருத்துவமனைகளின் அதிகாரிகளுக்கு மருத்துவ அதிகாரி முருகன் அனுப்பியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது:

கோவிட் ஷீல்டு என்ற கரோனா தடுப்பூசி நேற்று மாலை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒரு பாட்டில்களுக்கு 10 டோஸ் வீதம் 1,750 பாட்டில்கள் வந்துள்ளன. அதனை குளிர்பதன வசதியில்வைத்துள்ளோம். மாஹேவுக்கு இன்னும் மருந்து வந்து சேரவில்லை. நாளைக்குள் (இன்று) மருந்து வந்துவிடும்.

ஏனாம் மருத்துவமனையில் 320 டோஸ் மருந்து வந்துள்ளது. காரைக்காலுக்கு சேர்ந்து புதுச்சேரிக்கு மருந்து வந்துள்ளது. 16-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

7 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x