Published : 13 Jan 2021 08:12 PM
Last Updated : 13 Jan 2021 08:12 PM

பொய்ப்புகாரில் மிரட்டி ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிப்பு: பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு 

சென்னை

தன் மீது அளிக்கப்பட்ட பொய்ப் புகாரில் தன்னை மிரட்டிய ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர், தன்னிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரங்கள், செல்போன், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றைப் பறித்துவிட்டதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் வியாபாரி தொடர்ந்த வழக்கில் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்ய எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். ராஜசிம்மன் நாயுடு என்பவர் சென்னையைச் சேர்ந்த கே.எம்.விஷ்ணுபிரியா என்பவருடன் இணைந்து வியாபாரம் செய்து வந்தார். லாபத்தில் முறையாகப் பங்கு தராததால் விஷ்ணுபிரியாவுடனான வியாபாரத் தொடர்புகளை ராஜசிம்மன் துண்டித்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரியா, தனது இரண்டு கார்கள், மொபைல் போன், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார் என்று சூளைமேடு காவல் நிலையத்தில் ராஜசிம்மன் புகார் அளித்தார்.

இதேபோன்று, கடந்த 2018-ம் ஆண்டு தன் திருமணத்திற்காகப் பார்த்துப் பேசி நிராகரித்த உமாராணி என்பவருடன் விஷ்ணுபிரியா சேர்ந்துகொண்டு, தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் மீது பொய்ப் புகார் அளித்ததாகவும் ராஜசிம்மன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் பொய்ப் புகாரில் விசாரணை மேற்கொண்ட aனைத்து மகளிர் காவல் பெண் காவல் ஆய்வாளர் ஞானசெல்வம், பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி 5 லட்ச ரூபாய் பணம் கேட்டார். தான், 4 லட்ச ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்தபோது, மூவருக்கும் சேர்த்து 20 லட்ச ரூபாய் வேண்டும் என ஆய்வாளர் ஞானசெல்வம் மிரட்டினார் என்று ராஜசிம்மன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆய்வாளர் ஞானசெல்வம் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையம், துணை ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் ராஜசிம்மன் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், ஆய்வாளர் ஞானசெல்வம் தன்னிடமிருந்து தங்க மோதிரங்கள், மொபைல் போன், வாட்ச், கிரெடிட் கார்ட் என 8 லட்ச ரூபாய் மதிப்புள்ளவற்றைப் பறித்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து, ஆயிரம் விளக்கு காவல் நிலைத்தில் ஆய்வாளர் ஞானசெல்வம், உமாராணி, விஷ்ணுபிரியா ஆகிய மூவர் மீதும் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்ற நடுவர் இ.எம்.கே.யஷ்வந்த் ராவ் இங்கர்சால், மனுதாரர் ராஜசிம்மனின் புகாரில் முகாந்திரம் இருப்பதால், உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அதுகுறித்த இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x