Published : 13 Jan 2021 06:32 PM
Last Updated : 13 Jan 2021 06:32 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் இன்று பூக்கள் விலை அதிகரித்திருந்தது.
தோவாளை மலர் சந்தையில் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை ஏறும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம், சத்தியமங்கலம், மதுரை, பெங்களூரு, ஓசூர், சேலம், உதகை போன்ற பகுதிகளில் இருந்து தோவாளை சந்தைக்கு பூக்கள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
அதேநேரம் மல்லிகைப் பூவிற்குத் தட்டுப்பாடு நிலவியது. மொத்தமே 30 கிலோவிற்குள் மட்டுமே மல்லிகைப் பூ வந்ததால் விலை கடும் ஏற்றம் அடைந்தது. முந்தைய தினம் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ இன்று ரூ.2500க்கு விற்பனை ஆனது. இதைப்போல் ரூ.600க்கு விற்பனை ஆன பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ரோஜா ரூ.220, கிரேந்தி ரூ.70, சம்பங்கி ரூ.125, வாடாமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.60, அரளி ரூ.250க்கு விற்பனை ஆனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்திருந்த நிலையில் மழையால் எதிர்பார்த்த அளவு பூக்கள் இல்லாததால் வேகமாக விற்றுத் தீர்ந்தது. பூக்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT