Published : 13 Jan 2021 06:13 PM
Last Updated : 13 Jan 2021 06:13 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை

மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.

ஜன.14 மற்றும் ஜனவரி 15 ஆகிய தேதிகளில் தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையும் நிலவும்.

ஜனவரி 16 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 17 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 20 செ.மீ., சேத்தியாதோப்பில் 21 செ.மீ., புவனகிரியில் 20 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 19 செ.மீ., மணிமுத்தாற்றில் 17 செ.மீ., சிதம்பரத்தில் 16 செ.மீ., பெருந்துறையில் (கடலூர்) 14 செ.மீ., சீர்காழியில் (நாகப்பட்டினம்) 12 செ.மீ., திருவிடைமருதூரில் (தஞ்சாவூர்) 11 செ.மீ., அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), விருத்தாச்சலம் (கடலூர்) பகுதிகளில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மயிலாடுதுறை, லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) குடவாசல் (திருவாரூர்) கொள்ளிடம் (நாகப்பட்டினம்) கும்பகோணம் ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ., செந்துறை (அரியலூர்) நாகப்பட்டினம், பேராவூரணி (தஞ்சாவூர்) தேக்கடி (தேனி) நன்னிலம் (திருவாரூர்) ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ., காட்டுமன்னார்கோவில் (கடலூர்) ஜெயங்கொண்டம் (அரியலூர்), திருவாரூர், சேரன்மாதேவி (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவானது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஜனவரி 13 அன்று குமரிக் கடல் பகுதி, கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜன 14 அன்று லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x