Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 85 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்துமொத்தம் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 10,228சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, 2-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து 2,050தினசரி பேருந்துகளோடு, 1,950சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் கடந்த 2 நாட்களாக அதிக அளவில் பயணம் செய்கின்றனர். கடந்த தீபாவளியுடன் ஒப்பிடுகையில் தற்போது கூட்டம் சற்று அதிகரித்துள்ளது. இதேபோல், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்குகிறோம். அதன்படி, முதல்நாளில் 1.20 லட்சம் பேரும், 2-வது நாளில் (நேற்று) 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பயணம் செய்துள்ளனர்.
மேலும், சென்னையில் இருந்து இன்று தினசரி பேருந்துகள் 2,050 மற்றும் 1,952 சிறப்பு பேருந்துகளையும் இயக்கவுள்ளோம். இன்றுகூட்டம் அதிகரிக்கும் என்பதால், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போதிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்’’என்றனர்.
இதேபோல், சென்ட்ரல், தாம்பரம், உள்ளிட்ட இடங்களில் இருந்து20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டன. சிறப்பு ரயில்களில்முன்பதிவு இல்லாத பெட்டிகள்இணைக்கப்படாததால், கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “கரோனா ஊரடங்கு காரணமாக வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் சேவை முழுமையாக தொடங்கவில்லை. இருப்பினும், பயணிகளின் தேவை அடிப்படையில் பல்வேறு இடங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம்.
முன்பதிவு இல்லாத பெட்டி இல்லாததால், ரயில் நிலையங்களில் கூட்டம் சற்று குறைவாக இருக்கிறது. இருப்பினும், முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களில் கடந்த2 நாளில் மட்டும் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய் துள்ளனர்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT