Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாளை சென்னை வருகை: பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக நாளைசென்னை வருகிறார். பாஜக சார்பில் நடக்கும் பொங்கல் விழாவிலும், ‘துக்ளக்’ ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.

‘துக்ளக்’ வார இதழின் 51-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நாளை (ஜன.14) நடக்கிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாபங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு பதிலாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். நாளை மாலை 4 மணிக்கு சென்னை வரும் நட்டாவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு சென்னை மேற்குமாவட்ட பாஜக சார்பில் மதுரவாயலில் நடக்கும் ‘நம்ம ஊரு பொங்கல்’ விழாவில் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ‘துக்ளக்’ ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். இரு நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு நட்டா டெல்லி திரும்புகிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று கூறியதாவது:

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பொங்கல் தினத்தன்று சென்னை வருகிறார். பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவிக்கும் என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறியிருக்கிறார். அதைத்தான் நாங்களும் கூறி வருகிறோம்.

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களில் ‘வருங்காலமுதல்வர்' என்றுதான் அக்கட்சியினர் முழக்கமிடுகின்றனர். எங்களிடம் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி கேட்பவர்கள், திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா, உதயநிதியா என்று கேட்க வேண்டும்.

மதுரையில் பாஜக நடத்திய பொங்கல் விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜக மாவட்ட அலுவலகத்தை தாக்கியுள்ளனர். எங்கள் மாவட்டத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x