Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்திருப்பதாவது:

குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13-ம் தேதி (இன்று) ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடியுடன் கூடிய கனமுதல் மிகக் கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

14-ம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். 15, 16-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

சென்னை,புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு நா.புவியரசன் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x