Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஊழல், அதிகார அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்முடிவு செய்திருப்பது அதிர்ச்சிஅளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்து சென்றபிறகு அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆணையிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட 2 துணைவேந்தர்களும் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களோ, அப்பழுக்கற்ற பின்னணி கொண்டவர்களோ அல்ல.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் அவற்றின்துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட,துணைவேந்தர்களை ஆளுநரால்தன்னிச்சையாக நியமிக்க முடியாது. அரசுத் தரப்பு பிரதிநிதி,பல்கலைக்கழகத் தரப்பு பிரதிநிதி,ஆளுநர் தரப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரைத்தான் துணைவேந்தராக நியமிக்க முடியும். அதேநேரம், பதவிக்காலம் முடிவடைந்த துணைவேந்தரின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆளுநருக்கு எந்த வகையிலும் அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஆளுநர் மாளிகை திரும்பப்பெற வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக் கூடாது. அவரதுபதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அவர் மீதான விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், வழக்கு பதிவு செய்து, துணைவேந்தர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x